Archives: மே 2021

ரகசியமாகக் கொடுப்பவர்

உடல் ஊனமுற்ற வீரரான கிறிஸ்டோபரைப் பொறுத்தவரை, அன்றாட நடவடிக்கைகள் மிகவும் சவாலானதாகிவிட்டது. அவைகளை செய்து முடிக்க அதிக நேரம் பிடித்தது. அது அவரது வலியை அதிகரித்தது. ஆனாலும், அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளின் பொருட்டு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார். ஒவ்வொரு வாரமும் அவர் தனது தோட்டத்தில் கடினமாக உழைப்பதை வழிப்போக்கர்கள் பார்ப்பார்கள்.

ஒரு நாள் கிறிஸ்டோபருக்கு ஒரு கடிதமும் அவரது தோட்ட வேலைகளில் அவருக்கு உதவ ஒரு விலையுயர்ந்த இயந்திரமும் அறியப்படாத நன்கொடையாளரிடமிருந்து வந்திருந்தது. தேவைப்படுபவருக்கு ரகசியமாய் உதவுவதின் பாக்கியத்தை பெறுவதின் மூலம் கொடுத்த அந்த நபர் திருப்தியடைந்தார்.

இயேசு நாம் கொடுப்பது அனைத்துமே இரகசியமாக இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் நாம் கொடுக்கும்போது நம்முடைய நோக்கங்களை சரிபார்க்க அவர் நமக்கு நினைவூட்டுகிறார் (மத்தேயு 6:1). அவர் மேலும் சொன்னார்: “ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே” (வச.2). நாம் மனமுவந்து கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார். பாராட்டுக்களை பெறுவதற்கோ அல்லது சிறப்பு அங்கீகாரம் பெறுவதற்கோ மக்கள் முன் நல்ல செயல்களை செய்வதை தவிர்க்க அவர்களை ஊக்குவிக்கிறார் (வச. 3). 

நம்மிடம் உள்ள அனைத்தும் தேவனிடமிருந்து கிடைத்தது என்பதை நாம் உணரும்போது, நம்முடைய முதுகில் யாரும் தட்டி கொடுக்கவோ அல்லது மற்றவர்களின் புகழைப் பெறவோ நாம் விரும்பமாட்டோம். ரகசியமாய் உதவிசெய்வதில் திருப்தியுள்ளவர்களாய் இருக்கமுடியும். நமக்கு நன்மைகளை பெருகச்செய்யும் எல்லாம் அறிந்த தேவன், தாராளமாய் கொடுப்பவர்கள் மீது பிரியமாயுள்ளார். அவருடைய ஒப்புதலின் வெகுமதியை எதுவும் தடுக்க முடியாது.

எனக்கு தகுதியானதா அல்லது நான் தகுதியுள்ளவனா?

ஆப்பிரிக்க நாட்டின் காங்கோ பகுதியில் ஆங்கில மிஷனரி மருத்துவரான ஹெலன் ரோஸ்வேர் 1964இல் ஏற்பட்ட சிம்பா கிளர்ச்சியின்போது கிளர்ச்சியாளர்களால் சிறைபிடிக்கப்பட்டார். அவர் அவர்களால் தாக்கப்பட்டு, தவறாய் கையாளப்பட்டதால், அவர் மிகவும் பாதிக்கப்பட்டார். தொடர்ந்த நாட்களில், “இது எனக்கு தகுதியானதா?” என்று தனக்குள்ளேயே கேட்டுக்கொண்டார்.

இயேசுவைப் பின்தொடர்வதற்கான கிரயத்தை அவள் சிந்திக்கத் தொடங்கினபோது, தேவன் அதைப் பற்றி அவளிடம் பேசுவதை உணர்ந்தாள். பல வருடங்கள் கழித்து அவள் ஒரு நேர்காணலுக்கு பேட்டியளிக்கும்போது, “கிளர்ச்சியின் மிகவும் மோசமான தருணங்களில், கர்த்தர் என்னிடம், “இது எனக்கு தகுதியானதா?” என்னும் கேள்வியை மாற்றி “நான் இதற்கு தகுதியானவளா?” என்று கேட்கும்படி எனக்கு உணர்த்தினார். அவளுடைய வலி மிகுந்த வேதனைக்கு மத்தியிலும் “ஆம்! அவர் தகுதியானவர்” என்னும் முடிவுக்கு தான் வந்ததாக அறிவித்தார். 

தனது துன்பகரமான சோதனையின்போது அவளுக்குள் இருந்த தேவ கிருபையின் மூலம், ஹெலன் ரோஸ்வேர், அவருக்காக மரணத்தை கூட அனுபவித்த மீட்பருக்காக எதையும் சகிக்கலாம் என்ற முடிவுக்கு வந்தார். “அவர் தகுதியானவர்” என்ற அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துதல் புத்தகத்தில் இயேசுவின் சிங்காசனத்தைச் சுற்றியுள்ளவர்களின் அழுகையை எதிரொலிக்கின்றன: “அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள்!” (5:12).

நம்முடைய இரட்சகர் நமக்காக துன்பப்பட்டு, இரத்தம் சிந்தி மரித்தார்; நித்திய ஜீவனையும் நம்பிக்கையையும் இலவசமாக நாம் பெறுவதற்காக, தன்னை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தார். அவருடைய அனைத்துமே நம் அனைவருக்கும் தகுதியானவை. அவர் தகுதியானவர்!

மரண மண்டலம்

2019 ஆம் ஆண்டில், ஒரு மலை ஏறுபவர் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சத்திலிருந்து தனது கடைசி சூரிய உதயத்தைக் கண்டார். அவர் ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். ஆனால் உயரமான இடம் அவரது இதயத்தை கசக்கியது. மேலும் அவர் மலையேற்றத்தில் இறந்தார். ஒரு மருத்துவ நிபுணர், மலை ஏறுபவர்கள் சிகரத்தின் உச்சத்தை தங்களுடைய பயணத்தின் முடிவாக எண்ணவேண்டாம் என எச்சரிக்கிறார். “அவர்கள் மரண மண்டலத்தில் இருக்கிறார்கள்” என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, அவர்கள் விரைவாக புற்பபட்டு கீழே வர வேண்டும்.

தாவீது தனது ஆபத்தான ஏறுதலில் இருந்து தப்பினார். அவர் சிங்கங்களையும் கரடிகளையும் கொன்றார். கோலியாத்தை கொன்றார். சவுலின் ஈட்டியைத் எடுத்து இராணுவத்தைத் தொடர்ந்தார். பெலிஸ்தர்களையும் அம்மோனியர்களையும் வென்று மலையின் உச்சத்தை அடைந்தார்.

ஆனால் தாவீது, தான் மரண மண்டலத்தில் இருப்பதை மறந்துவிட்டார். அவரது வெற்றியின் உச்சத்தில், “தாவீது போன இடத்திலெல்லாம் கர்த்தர் அவனைக் காப்பாற்றினார்” (2 சாமுவேல் 8: 6). அவர் விபச்சாரம் மற்றும் கொலை போன்ற செய்கைகளிலும் ஈடுபட்டார். அது அவரது ஆரம்ப தவறு? அவர் மலை உச்சியில் நீடித்தார். அவருடைய இராணுவம் புதிய சவால்களுக்கு புறப்பட்டபோது, அவர் “எருசலேமில் இருந்துவிட்டான்” (11:1). தாவீது ஒருமுறை கோலியாத்தை எதிர்த்துப் போராட முன்வந்தார்; இப்போது அவர் தனது வெற்றிகளின் பாராட்டுகளில் நிதானமாக இருந்தார்.

தேவன் உட்பட எல்லோரும் நீங்கள் சிறப்புடையவர் என்று கூறும்போது நிதானமாக தலைக்கணம் இல்லாமல் இருப்பது கடினம் (7:11-16). ஆனால் நாம் அப்படி தான் இருக்க வேண்டும். நாம் சில வெற்றிகளைப் பெறும்போது, நமது சாதனையை சரியான முறையில் கொண்டாடலாம், வாழ்த்துக்களை ஏற்கலாம். ஆனால் நாம் தொடர்ந்து பயணம் செய்யவேண்டும். நாம் மரண மண்டலத்தில் இருக்கிறோம். மலையிலிருந்து கீழே இறங்கவேண்டும். உங்கள் இருதயத்தையும் உங்கள் நடைகளையும் பாதுகாக்கும்படி தேவனிடம் கேட்டு, பள்ளத்தாக்கில் உள்ள மற்றவர்களுக்கு பணிவுடன் சேவை செய்யுங்கள்.

வானவில் ஒளிவட்டம்

மலை உச்சியல் தாழ்வான மேகங்களுக்கு பின்பாக ஒளிருகின்ற காட்சியை அட்ரியன் பார்வையிட்டார். கீழே பார்த்தபோது, அவரது நிழலை மட்டுமல்ல, சிதயிருந்த வண்ணப் பட்டி (ப்ரோக்கன் ஸ்பெக்டர்) என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான காட்சியையும் பார்த்தார். இந்த நிகழ்வு ஒரு வானவில் ஒளிவட்டத்தை ஒத்திருந்தது. இது அந்த நபரின் நிழலை சுற்றி வளைந்திருந்தது. சூரிய ஒளி கீழே உள்ள மேகங்களை பிரதிபலிக்கும் போது இது நிகழ்கிறது. அட்ரியன் அதை ஒரு “மந்திர” தருணம் என்று கூறுகிறார். இது அவரை மிகவும் மகிழ்வித்தது.

முதல் வானவில்லை பார்த்த உணர்வு நோவாவுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்பதை நாம் கற்பனை செய்யலாம். அவரது கண்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்ததை காட்டிலும், ஒளிவிலகலும் வெளிச்சமும் அதன் விளைவாக வரும் வண்ணங்களும் தேவனிடமிருந்து ஒரு வாக்குறுதியுடன் வந்தன. ஒரு பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்திற்குப் பிறகு, நோவாவுக்கும், பின்னர் வாழ்ந்த எல்லா “மாம்ச ஜீவன்களுக்கும்”, “இனி ஜலமானது பிரளயமாய்ப் (பெருகாதபடிக்கு) எனக்கும் உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும் உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன் (ஆதியாகமம் 9:15) என்று தேவன் உடன்படிக்கை ஏற்படுத்துகிறார்.

நம் பூமி இன்னமும் வெள்ளம் மற்றும் பிற பயமுறுத்தும் சீதோஷ நிலை ஆகியவற்றை அனுபவிக்கிறது. அது துன்பகரமான இழப்பையும் அவ்வப்போது ஏற்படுத்துகிறது. ஆனால் வானவில் என்பது உலகளாவிய வெள்ளத்தால் பூமியை மீண்டும் தேவன் அழிக்கமாட்டார் என்பதற்கான வாக்குறுதியாகும். அவருடைய விசுவாசத்தின் இந்த வாக்குறுதி, இந்த பூமியில் தனிப்பட்ட இழப்புகள் மற்றும் உடல் ரீதியான மரணங்களை நாம் தனித்தனியாக அனுபவிப்போம் என்றாலும், நோய், இயற்கை பேரழிவு, தவறு, அல்லது வயது முதிர்வால் நாம் எதிர்கொள்ளும் சிரமங்கள் முழுவதும் தேவன் தம்முடைய அன்பையும் முன்னிலையையும் கொண்டு நம்மை மேம்படுத்துகிறார். சூரிய ஒளியானது நீரின் மூலம் வண்ணங்களை பிரதிபலிக்கிறது, அவருடைய உருவத்தைத் தாங்கி, அவருடைய மகிமையை மற்றவர்களுக்கு பிரதிபலிப்பவர்களால் பூமியை நிரப்ப அவர் உண்மையுள்ளவர் என்பதை நினைவூட்டுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்

> odb

தகுதி உரிமையல்ல

ஞாயிறு பள்ளிக்குப் பிறகு, வீட்டிற்குச் செல்வதற்காகப் பேருந்தில் ஏறினேன். தென்னிந்தியாவின் ஒரு முக்கிய கல்லூரியின் புதிய இயக்குநராக நான் அறிந்திருந்த ஒருவர் பின்னால் அமர்ந்திருந்தார். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வழக்கமாகச் செல்லும் பொதுப் பேருந்தில் அவரைப் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரது பதவியில் உள்ள பெரும்பாலானோர் தங்களுக்கென நியமிக்கப்பட்ட வாகனம் மற்றும் ஓட்டுநரைக் கொண்டிருப்பார்கள். எனவே, நான் அவரிடம், "நீங்கள் எப்படி காரில்லாமல் பேருந்தில் செல்கிறீர்கள்?" என்று கேட்டேன். அவர், "நான் எப்போதும் பேருந்தில் செல்வதால்தான்" என்று பதிலளித்தார், அவரது புதிய பதவி அவரது வழக்கமான நடைமுறையை மாற்றவில்லை. அவர் தனது பட்டத்துக்குரிய உரிமையை அனுபவிக்க உடன்படவில்லை.

பிலிப்பியில் உள்ள சபைக்கு எழுதிய நிருபத்தில், விசுவாசிகள் தாழ்மையுடன் இருக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார் (வ.3). அவர்கள் "வாதினாலாவது" அல்லது "வீண்பெருமையினாலாவது" (வ.3) எதையும் செய்யக்கூடாது என்று அவர் கூறுகிறார். மாறாக, அவர்கள் ஒருவருக்கொருவர் உறவாடுவதில், "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே" (வ.5) கொண்டிருக்க வேண்டும். உன்னதமான அந்தஸ்தை இயேசு பெற்றிருக்கிறார். "அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்" (வ.6) இருந்தார். அவர் தனக்குரியதை ஒதுக்கி வைத்துவிட்டு, நம்முடைய நலன்களில் அக்கறை கொண்டார். அவர் "அடிமையின் ரூபமெடுத்து" , மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார் (வ.7-8).

நமது வேலை, கல்வி, வயது அல்லது சமூக அந்தஸ்து போன்றவற்றின் காரணமாக நாம் விசேஷமான முறையில் நடத்தப்படுவதற்குத் தகுதியானவர்கள் என்று நாம் உணரும்போது, நமது தகுதிகளையும் நமது உரிமை உணர்வையும் எவ்வாறு ஒதுக்கி வைப்பது என்பதை இயேசு நமக்குக் காட்டினார் என்பதனை நினைவில் கொள்வோம். கடினமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதை நமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடாது. மாறாக, தேவனுக்குக் கீழ்ப்படிந்து சக மனிதர்களிடம் பணிவாக இருக்கும் மனநிலையை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவனின் திறந்த வாசல்கள்

ஒரு பெருநகர் அருகிலுள்ள எனது புதிய பள்ளியில், வழிகாட்டி ஆலோசகர் என்னை ஒருமுறை ஏறெடுத்துப் பார்த்தபின், மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாணவர்கள் உள்ள ஆங்கில வகுப்பை எனக்கு கொடுத்தார். நான் எனது முந்தைய பள்ளியிலிருந்து சிறந்த தேர்ச்சி, சிறந்த மதிப்பெண்கள் மற்றும் எனது எழுத்துக்கான முதல்வரின் விருதுடன் வந்திருந்தேன். ஆனால் இந்தப் புதிய பள்ளியில் “சிறந்த” வகுப்பிற்கான கதவு எனக்குத் திறக்கப்படவில்லை. வழிகாட்டி ஆலோசகர் நான் பொருத்தமற்றவனோ அல்லது தயாராகவோ இல்லை என்று முடிவு செய்திருந்தார்.

இப்படிப்பட்ட சகஜமான பின்னடைவுகளை ஆதிதிருச்சபையான பிலதெல்பியா தன் அனுபவத்தில் பெற்றிருந்தது. சிறிய மற்றும் எளிமையான அந்த திருச்சபை இருந்த நகரம் சமீபத்திய ஆண்டுகளில் பூகம்பங்களால் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தைச் சந்தித்திருந்தது. மேலும் சாத்தானின் எதிர்ப்பை சந்தித்தனர் (வெளிப்படுத்துதல் 3:9). புறக்கணிக்கப்பட்ட இந்த திருச்சபைக்கு உயிர்த்தெழுந்த இயேசு, “உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமல், என் வசனத்தைக் கைக்கொண்ட படியினாலே” (வ.8) எனக் குறிப்பிட்டார். ஆகையால், “ஒருவரும் பூட்டக்கூடாதபடிக்குத் திறக்கிறவரும், ஒருவரும் திறக்கக்கூடாதபடிக்குப் பூட்டுகிறவருமாயிருக்கிறவர்” (வ.7) அவர்களுக்கு “எவராலும் மூட முடியாத இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன் “(வ.8) என்றார்.

நமது ஊழியத்திற்கும் இது பொருந்தும். சில கதவுகள் திறக்கப்படுவதே இல்லை. இருப்பினும், ஒரு வழிகாட்டி ஆலோசகர் கதவை அடைத்தாலும், தேவன் எனக்கு நிச்சயமாகவே கதவுகளைத் திறந்துள்ளார், அவருக்காக நான் எழுதுவதன் மூலம், உலகளாவிய உள்ளங்களைத் தொடும் வாய்ப்பை தந்தார். உங்களையும் மூடிய கதவுகள் தடுக்காது. இயேசு “நானே வாசல்” என்றார் (யோவான் 10:9). அவர் திறக்கும் கதவுகளுக்குள் நுழைந்து அவரைப் பின்பற்றுவோம். 

தேவனின் ஞானமான நோக்கங்கள்

இந்தியா வரலாறுகளால் நிரம்பியுள்ளது. நீங்கள் செல்லும் இடமெல்லாம், வரலாற்றுச் சிறப்பு மிக்கவர்களின் நினைவுச்சின்னங்கள் அல்லது முக்கியமான நிகழ்வுகளை நினைவுகூரும் இடங்களைக் காணலாம். ஆனால் இங்கிலாந்தில் உள்ள ஒரு உணவகத்தில் ஒரு வேடிக்கையான செய்தி பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் வாயிலருகே உள்ள ஒரு பலகையில், “இந்த இடத்தில், செப்டம்பர் 5, 1782 அன்று, எதுவும் நடக்கவில்லை” என்று எழுதப்பட்டுள்ளது.

அநேக வேளையில் நம்முடைய ஜெபத்திற்குப் பதில் கிடைக்காதது போலவே தோன்றுகிறது. அவர் இப்போதே பதிலளிப்பார் என்ற எதிர்பார்ப்புடன், நாம் மீண்டும் மீண்டும் ஜெபிக்கிறோம், நமது விண்ணப்பங்களை நமது தந்தையிடம் கொண்டு வருகிறோம். சங்கீதக்காரனாகிய தாவீதும் ஜெபிக்கையில் இப்படிப்பட்ட விரக்தியை வெளிப்படுத்தினான்: “கர்த்தாவே, எதுவரைக்கும் என்னை மறந்திருப்பீர், எதுவரைக்கும் உம்முடைய முகத்தை எனக்கு மறைப்பீர்?” (சங்கீதம் 13:1). அதே வண்ணம் நாமும் எளிதாக “ஆண்டவரே, நீர் பதிலளிக்க இன்னும் எவ்வளவு காலம்?” எனலாம்.

எனினும், நம் தேவன் ஞானத்தில் மட்டுமல்ல, அவருடைய நேரத்திலும் பூரணர். எனேவ தாவீது சொன்னான், “நான் உம்முடைய கிருபையின்மேல் நம்பிக்கையாயிருக்கிறேன்; உம்முடைய இரட்சிப்பினால் என் இருதயம் களிகூரும்”(வ. 5). பிரசங்கி 3:11, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” என்று நமக்கு நினைவூட்டுகிறது. ‘நேர்த்தியாக” என்ற சொல்லுக்கு “பொருத்தமானது” அல்லது “மகிழ்ச்சியின் காரணம்” என்று பொருள். தேவன் நாம் விரும்பியபடி நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்காமல் இருக்கலாம், ஆனால் அவர் எப்போதும் தனது ஞானமுள்ள நோக்கங்களைச் செயல்படுத்துகிறார். அவர் பதில் கொடுக்கும்போது, அது சரியாகவும், நல்லதாகவும், அழகாகவும் இருக்கும் என்று நாம் மனதார நம்பலாம்.